முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு வழக்கு தாக்கல்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக அமைதியான முறையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது எற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் , இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 12, புதுக்கடை வீதியைச் சேர்ந்த சட்டத்தரணியான சேனக பெரேராவினால் தனிப்பட்ட ரீதியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.