
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
பின்னர் வழக்கை ஜனவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.
28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அண்மையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
			
