முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட இல்லம் இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை!
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள இல்லம், சம்பந்தன் இறந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்ததுடன், பின்னர் 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிக்கு வந்த போது அங்கு தொடர்ந்து வசிக்க வழங்கப்பட்டது.
இந்த வாசஸ்தலத்தை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்த போதிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இந்த தீர்மானம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, புதிய அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017 ஆம் ஆண்டு இந்த வீட்டின் பழுதுபார்க்கும் பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதுடன் இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால் ஏற்கப்படுவதாகவும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்