
முடியைப் பிடித்து இழுத்துச் சண்டையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
மெக்சிக்கோ நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை சட்டமூலம் ஒன்றின் மீதான விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஒருவரையொருவர் தாக்கும் வன்முறையாக மாறியது.
மெக்சிக்கோ அரசாங்கம் அந்நாட்டின் ‘வெளிப்படைத்தன்மைக்கான அமைப்பைக் கலைப்பதற்கான புதிய சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வந்தது.
இந்த அமைப்பைக் கலைப்பதன் மூலம் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை குறையும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் நடுப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.
உறுப்பினர்கள் ஒருவரையொருவர் தள்ளிவிட்டுக் கொண்டதுடன், ஆவேசமடைந்த சில உறுப்பினர்கள் மற்றவர்களின் முடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியதால் அவையில் பெரும் பதற்றம் நிலவியது.
நாடாளுமன்றத்திற்குள் நிலவிய கட்டுப்பாடற்ற சூழலைத் தொடர்ந்து, கூட்டத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
மக்களாட்சியின் உயரிய சபையான நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு நடந்து கொண்டது அரசியல் நாகரீகமற்ற செயல் என சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
