மீனவர்களுக்கு, வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளிலும் இடைக்கிடையே ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.