மீண்டும் ஒருமுறை தமிழருக்கு எதிரான சூழலொன்று அமைவதற்கான சாத்தியங்கள் தெரிகிறது!

-மட்டக்களப்பு நிருபர்-

தற்பொழுது நாட்டிலே நடக்கும் விடயங்களைப் பார்த்தால் மீண்டும் ஒருமுறை தமிழருக்கு எதிரான சூழலொன்று அமைவதற்கான சாத்தியங்கள் தெரிவதாக மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

நாட்டிலேற்பட்டுள்ள தற்போதைய நிலை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வூடகச் சந்திப்பு களூவாஞ்சிகுடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,

நாங்கள் மிக அவதானமாகச் செயல்பட வேண்டிய காலப்பகுதியாக இக்காலகட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் குறிப்பாக அண்மையிலே பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எங்களுடைய வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் நீதி அரசர்களை பற்றிக் கூட குற்றம் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக போய்க் கொண்டிருக்கின்றது.

குருந்தூர் மலையில் தன்னை பேசவிடவில்லை எனக் கூறி ஒரு குற்றச்சாட்டுக்காக நீதி அரசர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது சிங்கள நாடு. சிங்கள நாட்டிலே நாங்கள் தான் ஆட்சியாளர்கள் என்று சொல்லி, இவ்வாறான மனப்பாங்குகளின் காரணத்தினால் தான் நாடு இந்த வங்குரோத்து சூழ்நிலையை அடைந்திருக்கின்றது.

நாங்களும் பல இடங்களில் இதுபற்றி பேசி இருக்கின்றோம். இதற்கான தீர்வைக் காண வேண்டும். ஜனாதிபதி முன்னிலையில் கூட காத்திருக்கின்றோம். இன்று ஜூலை 12ஆம் தேதி ஆகியிருக்கின்றது. ஜூலை 30க்கிடையிலே ஒரு முடிவை ஜனாதிபதி சொல்வதாக கூறி இருக்கின்றார்.

ஆனால் இதிலே ஒரு சாதகமான முடிவை சொல்லக்கூடிய சூழல் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கான காரணமாக அண்மைக்காலமாக நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், மொட்டுக்கட்சியினர் தமது கட்சியினுடைய மாவட்ட கிளைகள், பிரதேச கிளைகள், தொகுதிகளைப் புனரமைப்புகள் செய்து கூட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

இந்தக் கூட்டங்கள் அனைத்தையும் பார்த்தால் நேரடியாக அரசாங்கத்தை தாக்கும் கருத்துக்களை தான் அவர்கள் முன்வைக்கின்றார்கள். இதிலே வேடிக்கையான விடயம் என்னவென்றால், அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருந்து கொண்டுஇ பாராளுமன்றத்திலே அரசாங்கத்திற்கு புதிய சட்டமூலத்தை அமுல் படுத்துவதற்கு தேவை வரும்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் அதனை ஆதாரித்திருக்கின்றார்கள்.

இதிலே அண்மையிலே நடந்த எங்களுடைய ஈ.பி.எப்ஃ மற்றும் ஈ.டி.எப்ஃ மக்களுடைய பணத்தினை அரசாங்கம் தவறான முடிவுகளின் ஊடாக அந்த பணத்தை அழிக்கும் ஒரு திட்டத்தை கொண்டு வந்த பொழுதும் கூட அந்த வாக்கெடுப்பிலே அதிகளவாக- ஆதரவாக வாக்களித்தவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் தான்.

இதில் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்சே போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வெளியில் வந்து தாங்கள் ஈ.பி.எப்ஃ மற்றும் ஈ.டி.எப்ஃ இல் கை வைக்க விடமாட்டோம் என ஒருபுறம் சொல்கின்றார்கள். ஆனால் பாராளுமன்றத்தில் அதற்கு ஆதரவாக வாக்களிக்கின்றார்கள்.

இதேபோன்று அண்மைக் காலமாக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. அதாவது பாராளுமன்ற வளாகத்தின் முன்பாக ஜே.வி.பி ஐ சேர்ந்த சில உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும்இ அவர்கள் அந்த நேரத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு சென்று விடக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்த ஜே.வி.பியினரைக் கைது செய்யவில்லை. ஒரு விசாரணை கூட செய்யவில்லை. தங்களுக்கு அதிருப்தி இருக்கின்றது என நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஒரு கூட்டத்திலே பேசி இருக்கின்றார்.

இவர்கள் ஆதரவில்லை என்று சொன்னால் இந்த அரசாங்கத்தில் ஏன் இருக்க வேண்டும். இது ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு திட்டமிட்ட செயல்பாடாக தான் நான் பார்க்கின்றேன்.

ஒரு பக்கத்தினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என கூறி, சர்வதேசத்தினுடைய ஆதரவினைப் பெற முயற்சி எடுத்து அந்த அனுதாபத்தையும் பெற்று அதே போன்று உள்நாட்டுக்கு உள்ளே பிரச்சனைகளை தீர்க்காமல் இருப்பதற்கு தங்களுக்கும் மொட்டு கட்சியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு விட்டதாக காட்டுவதற்கான முயற்சியினை மேற்கொண்டு இருக்கின்றனர்.

இது ஒரு மிகவும் அவதானமான ஒரு காலப்பகுதியாகும். தமிழர்களுக்கு இதிலும் குறிப்பாக தமிழ் தரப்பிலும் கூட மிக கவலையான ஒரு விடயம். அண்மையிலே வவுனியாவில் கரும்புத் தோட்டம் செய்வதற்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகளை எடுத்து செய்வதற்காக அந்த காணிகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்திருப்பதாக ஒரு செய்தியை பார்க்கக் கூடியதாக இருந்தது.

வவுனியா மாவட்டத்தில் எடுத்துக்கொண்டால் எங்களுடைய தமிழ் உறவுகள் எத்தனையோ பேர் ஒரு சிறிய துண்டு நிலம் கூட இல்லாமல் விவசாயம் செய்வதற்கு அல்லல்படுகின்றனர். ஆனால் இதில் கவலையான விடயம் என்னவென்றால் தமிழ் தரப்பில் அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு பங்காளி கட்சியாக இருக்கும் டெலோ கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி அவர்கள் பெயர் அந்த கம்பெனியில் அவரும் ஒரு உப தலைவராக பெயர் குறிப்பிட்டு ஒரு செய்தி வந்திருக்கின்றது.

தமிழர்களுடைய நிலைமை இவ்வாறு மோசமாகக் காணப்படுகின்ற பொழுது தமிழ் தரப்பினைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியினுடைய பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். எதுவும் செய்யவில்லை. ஆனால் அதே நேரத்தில் இவ்வாறான மக்களுக்கு விரோதமான சில செயல்பாடுகளை முன்னெடுக்கின்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தங்களுடைய லாபத்தை சேர்ப்பதற்கு முயற்சிக்கின்ற செய்திகளை பார்க்கும்போது உண்மையிலேயே மன வேதனையை தருகின்றது.

நான் நினைக்கின்றேன் ஜனநாயக போராளிகள் கட்சியினுடைய தலைவர் கதிர் அவர்களும் மக்களுடைய காணிகளை விற்பதாக இருந்தால் என்னத்துக்கு இந்த கூட்டமைப்பு என செய்தி வெளியிட்டு இருந்தார். இதிலே மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

நாங்கள் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் எங்களுடைய மக்கள் சிலர் வந்து சில நேரங்களிலேயே கடந்த கோட்டபாய ராஜபக்ஷவினுடைய காலப்பகுதியிலே மிக நெருக்கடிகள் இந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு உருவாக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது நிலைமைகள் அவ்வாறாகதான் இருக்கின்றது. பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை.

காணிப் பிரச்சினைகள் அனைத்தும் அவ்வாறே இருக்கின்றது. எமது மக்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது. அரசியல் கைதிகளின் விடயம் அவ்வாறே இருக்கின்றது. புதியதொரு டி ஆர் சி யினை கொண்டு வந்து எங்களுடைய பொறுப்பு கூறல் விடயத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இல்லாமல் செய்ததற்கான செயற்பாடுகளை அலி சப்ரி அவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாகத்தான் இன்று நிலைமை காணப்படுகின்றது. ஆனால் நமது மாவட்டங்களிலும் மாகாணங்களிலும் சில வேலைகளில் நமது மக்கள் தங்களுடைய தேவைகள் எது என்று பார்த்தால் வீதி புனரமைப்பு அல்லது சிறு சிறு சலுகைகளுக்காக இந்த சில மோசமான நிலையினை ஏற்படுத்திய அரசாங்கத்தின் பங்காளிகளுடன் எங்களுடைய மக்கள் சில நேரங்களில் மறந்து விடக்கூடாது.

நாங்கள் கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எங்களுடைய மக்கள் நலம் சார்ந்த விடயங்களை பாராளுமன்றத்தில் முன்வைக்கின்றோம். அவ்வாறாக நாங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கின்ற போது பிரிவினவாதிகள் நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றார்கள் என தெற்கிலே எங்களுக்கு எதிரான ஒரு அணியை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கின்றளர். ரணில் அவர் ஒரு மிகவும் தந்திரமாக செயல்பட கூடியவர். நரி என்று சொல்வார்கள். இவை அனைத்தும் தமிழ் மக்களினுடைய நிரந்தரமான அரசியல் தீர்வு என்பதற்கான தேவை இல்லை.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை விரும்பவில்லை. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சி இல்லாவிட்டால் சாணக்கியன் போன்ற ஒரு சிலரின் தேவைக்காக இதை பேசுகின்றார்கள் என்று தெற்கிலேயும் சர்வதேசத்திலும் சொல்கின்ற அளவிற்கு நிலைமை மாற்றுவதற்கு முயற்சி எடுக்கின்றார்கள்.

இதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலாவது எங்களுடைய மாவட்டத்தில் இருக்கும் வளங்களைச் சூறையாடி எங்களுடைய மாவட்டத்தில் வளங்களை அழித்து தங்களுடைய அரசியலில் எதிர்வரும் காலங்களில் செய்வதற்காக பணம் உழைத்துக் கொண்டுஇ மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஈடுபாட்டுகின்ற தமிழ் பிரதிநிதிகள் உடனும் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோன்றுதான் தாங்களும் தமிழ் தேசியவாதிகள் என காட்டிக்கொண்டு நான் கூறியது போன்று பத்தாயிரம் மீட்டர் கரும்பு செய்தற்காக தங்களுடைய இருக்கும் தொடர்புகளை பயன்படுத்தி அரசுக்கு எதிர்ப்பு என காண்பித்து இவ்வாறாக தனியாரிடமிருந்து லாபம் பெறுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல சரத் வீரசேகர, நாமல் ராஜபக்ச போன்ற இனவாதத்தை மீண்டும் இந்த நாட்டுக்குள்ளே கொண்டு வந்து தங்களுடைய அரசியல் லாபத்தை தேடுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல இவர்கள் அனைவரையும் வைத்துக்கொண்டு இயக்கி தமிழ் மக்களின் தீர்வு தேவை இல்லை என்று சொல்ல முயற்சி எடுக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும், என்றார்.