
மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள்
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கான காரணம் மற்றும் காரணங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக திங்கட்கிழமை இலங்கை மின்சார சபையின் கணினி கட்டுப்பாட்டு அறைக்கு விஜயம் செய்ததாக அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்
“கணினி கட்டுப்பாட்டு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மின்தடைக்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் மின்சாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்தனர்,” என்று அவர் கூறினார்.
மின்தடைக்கான சரியான காரணங்களை கண்டறியவும் சரிபார்க்கவும் விசாரணைகள் நடந்து வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.
எதிர்காலத்தில் மின்தடையை தவிர்ப்பதற்காக, கணினி கட்டுப்பாடு மற்றும் விசாரணைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
