மாவடிப்பள்ளி விபத்து தொடர்பில் ஆராய்வு: உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னம்

-அம்பாறை நிருபர்-

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலின் கீழ் குறித்த விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட போது 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் சென்றுள்ளதாகவும் மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் 150 மீற்றர் இயந்திரத்துடன் இணைப்பை துண்டிக்கக் கூடிய வகையில் பெட்டி வேறாக பயணித்திருக்க கூடும் என்ற கோணத்தில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர விபத்து நடைபெற்ற போது அங்கு என்ன நடந்தது யார் யார் பயணித்தார்கள் போன்ற கேள்விகள் தொடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 12 பேருடன் பயணித்த உழவு இயந்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெள்ள நீரில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 8 சடலங்கள் மீட்புப் குழுவினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்