மாத்தறை – ருவன்எல்ல துப்பாக்கி சூட்டுக்கான காரணம்!

மாத்தறை – ருவன்எல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பணத் தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் நாளாந்த அடிப்படையில் வட்டிக்குப் பணம் வழங்குபவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் CCTV காணொளி காட்சிகளுக்கு அமைய, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பயணித்த காரின் இலக்கத் தகடு அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை – ருவன்எல்ல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

காரில் பிரவேசித்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாத்தறை – கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரென தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்காக மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்