மாணவியின் வயிற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட 2 கிலோ தலைமுடி

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியின் வயிற்றில் இருந்து இரண்டு கிலோ நிறையுள்ள தலைமயிர் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார்.இதனையடுத்து அவர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு ஸ்கான் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் பெரிய கட்டி போன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமிக்கு எண்டாஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டதில் சிறுமியின் வயிற்றில் தலை முடி கட்டி போன்று சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியின் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மருத்துவர் ஷாஜஹான் தலைமையிலான மருத்துவர்கள் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமியின் வயிற்றில் சேர்ந்திருந்த முடி அகற்றப்பட்டது.

இதன்போது அகற்றப்பட்ட முடி 2 கிலோ கிராம் எடையை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுமிக்கு தலைமுடியை கடித்து சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. அவள் சிறு வயது முதலே இந்த பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். அவள் கடித்து சாப்பிட்ட தலைமுடி, வயிற்றில் சேர்ந்து வந்தபடி இருந்திருக்கிறது.

தலைமுடியை உண்ணும் பழக்கம் கவலை மற்றும் மனஅழுத்தம் உள்ள குழந்தைகளிடம் அரிதாக காணப்படுவதாகவும், வயிற்றில் உள்ள உணவுடன் முடி சேர்ந்து பெரிய கட்டியை உருவாக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.