மாகாண மட்ட சம்பியனாக தெரிவாகிய குளக்கோட்டன் பாடசாலையின் வெற்றிக் கொண்டாட்டம்!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/குளக்கோட்டன் பாடசாலை மாணவர்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்து மாகாண மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமையை அடுத்து கௌரவிப்பு வீதி ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
இவ்வருட மாகாணமட்ட வலைப்பந்தாட்ட போட்டிகளில் (18 வயது கீழ் ) குளக்கோட்டன் பாடசாலை அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து குறித்த வீதி ஊர்வலம் இடம் பெற்றது.
மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வெற்றி வாகை சூடிய மாணவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் முகமாக, முள்ளியடி சிவத்தபாலத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி, தம்பலகாமம் சுவாமிமலை பிள்ளையார் ஆலயம் வரை சென்று, பின்னர் குளக்கோட்டன் பாடசாலை வந்தடைந்தது.
இதில் பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








