
மஸ்கெலியா பிரதேச சபை ஊடாக 17 லட்சம் ரூபா செலவில் வீதி விளக்குகள் பொருத்த நடவடிக்கை
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பிரதேச சபையால், 17 இலட்ச ரூபாய் செலவில் வீதி விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதேச சபைத் தலைவர் கந்தையா ராஜ்குமார் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தெரிவித்தார்.
தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மஸ்கெலியா பிரதேச சபையில் உள்ள 10 வட்டாரங்களில், 17 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் வரவு செலவுத் திட்டத்தில் ஆதரவாக வாக்களித்தவர்கள் இருக்கின்றார்கள்
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வீதம், 17 லட்ச ரூபாய் நிதி, வீதி விளக்குகள் பொருத்துவதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது, அதன்படி ஒவ்வொரு உறுப்பினருக்கும் 12 வீதி விளக்குகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை விரைவில் பொருத்தி, மக்கள் பயன் பெற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும், மஸ்கெலியா பிரதேச வரலாற்றில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.
எமது பிரதேச சபைக்கு உட்பட்ட மறே வட்டாரத்தில் பெப்ரவரி 6ஆம் திகதியும், முக்கா வட்டாரத்துக்கு பிப்ரவரி 27ஆம் திகதியும் இலவச ஆயுர்வேத நடமாடும் சேவையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய வட்டாரங்களுக்கும் விரைவில் நடத்தப்படும்.
எமது வட்டார உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, எமது பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பிலும் விவசாய பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழிகாட்டி ஆலோசனைகளை வழங்கும் வகையில் தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளார்கள், என தெரிவித்தார்.
