மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

-மஸ்கெலியா நிருபர்-

குளவி கொட்டுக்கு இலக்கான ஒன்பது பேர், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில், தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்ததில், அங்கு தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் தொழிலாளர்கள் ஆறு பேர், ஆண் தொழிலாளர்கள் மூன்று பேர் அடங்களாக ஒன்பது பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் நால்வர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர் எனவும், ஐந்து பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக, மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.