மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், வெளிநாட்டு செலாவணி தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய சேவைகளின் கட்டண அதிகரிப்பு காரணமாக, உள்நாட்டு சந்தையில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது தவிர்க்க முடியாமல் போகலாம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப மருந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் விலைகளை திருத்தம் செய்வது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தி வருவதால், எதிர்காலத்தில் மருந்து விலைகள் கணிசமாக உயரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், மேலதிக விலை உயர்வு ஏற்பட்டால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் மனநல பாதிப்புகளுக்கு நீண்டகால சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிக மோசமாக பாதிக்கப்படுவர்.

மேலும், அரசாங்கம் மருந்துக் கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தாலும், சில மருந்தகங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வதாக மருத்துவர் சமல் சஞ்சீவ குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போது, அவர்களுக்கு மானியம் அல்லது நிவாரண பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிடத் தவறினால், இது பாரிய பொதுச் சுகாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.