மயோனைஸுக்கு ஓராண்டு தடை

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருளாக மயோனைஸ் இருந்து வருகிறது

இந்நிலையில், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை உத்தரவில், சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, தமிழகத்தில் மயோனைஸ் உணவுப்பொருளுக்கு ஏப்.8ம் தேதி முதல் அடுத்த ஆணடு வரை தடை விதிக்கப்படுகிறது. ஓராண்டுக்கு இந்த தடை விதிப்பு தொடரும். தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க