மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்திற்கு தமது அரசாங்கத்தில் தீர்வு: சஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்திற்கு தமது அரசாங்கத்தினால் தீர்வு காணப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 21ஆம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதையடுத்து நல்லாட்சி அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட உதா கம்மான வீடமைப்பு வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அதேபோல, பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த பகுதிகள் தற்போது பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் விவசாயிகளின் காணிகள் மீண்டும் விவசாயத்துக்காக வழங்கப்படும்.

யானை மனித மோதலை குறைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 10 இலட்சம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்