
மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடனான முக்கிய சந்திப்பு
மட்டக்களப்பு பண்ணையாளர்களின் 90 ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் M.A. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து முக்கியமான இரு விடயங்களைப் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
சந்திப்பு தொடர்பில் இரா சாணக்கியன் தெரிவிக்கையில்,
அந்த வகையில் மயிலத்தமடு மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாடுகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகைப்படங்களை சமர்ப்பித்ததோடு; பொலிசாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் பிரதிகளையும் வழங்கினோம்.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் எமது மக்கள் 90 நாளாகவும் போராட்டத்தினை தொடர்கின்றனர் என்பதனைப் பற்றியும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
ஜானாதிபதி கூறிய எந்தவொரு விடயத்தினையும் இப் பிரச்சனைக்கான தீர்வாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெளிவுபடுத்தினோம்.
இரண்டாவதாக; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணைகள் இடம்பெறுவதோடு; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறிக்கொண்டாலும் அச் சட்டத்தினை கடைப்பிடித்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நிகழ்வில் கலந்து கொண்டோரை இன்றுவரை இனங்கண்டு கைது செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனையும் ஜனாதிபதிக்கு கூறினோம்.
அத்துடன் உடனடியாக இதனை முடிவிற்கு கொண்டுவர வேண்டுமெனவும். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை ஜனாதிபதிக்கு வழங்கி இவர்கள் PTA பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கையினை முன்வைத்தோம்.
தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் எட்டப்படாதவிடத்தும் எதற்காக ஜனாதிபதியினை சந்திக்கின்றீர்கள்? என மக்கள் கேள்விகள் எழுப்புகின்ற போது எமது விருப்பு வெறுப்புக்களை துறந்து ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோரை சந்தித்தும், நீதிமன்றங்களை நாடியும் மக்களுக்கான தீர்வினை பெறுவதற்கான எமது அயராத முயற்சி என்றும் எமது மக்களுக்காக தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதனை கூறிக் கொள்கின்றேன்.
அத்துடன் மக்களுக்கு சேவையாற்றவே மக்கள் எம்மை தெரிவுசெய்துள்ளனர். மக்களின் பணத்தை கொள்ளையடித்து வாழ்வததற்கு அல்ல, என தெரிவித்தார்.
