மயானம் அமைத்து தரக்கோரி இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் போராட்டம்

இந்தியாவில் பாலக்கோடு பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கை அகதிகள் 100 க்கும் மேற்பட்டோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கேசர்குளி அருகே உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் 80 குடும்பங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால் வேறு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று கேசர்குளி அருகில் உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் புதிய குடியிருப்புக்களை கட்டிய தமிழக அரசு இப்பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், சுடுகாடு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் கடந்த மார்ச் மாதம் இலங்கை அகதிகளை இம்முகாமில் குடியமர்த்தியுள்ளது.

கடந்த 7 மாதங்களாக இது குறித்து பல முறை தமிழக முதலமைச்சருக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த முகாமை சேர்ந்த ரூபன் (வயது – 55) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இவரது உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததாலும், பழைய முகாமில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல இயலாமலும்  மயானத்திற்கு இடம் கேட்டு பாலக்கோடு-கேசர்குளி வீதியில் 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.