மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ராட்சத அலைகள் மோதி கடல் சீற்றம்

-மன்னார் நிருபர்-

தனுஷ்கோடி தெற்கு மற்றும் வடக்கு கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுவதால் முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள படகு நிறுத்தும் தளம் மீது கடல் அலைகள் மோதி ராட்சத அலையாக எழும்பி வருகிறது.

கடற்கரை பகுதியில் வீசி வரும் சூறைக்காற்று காரணமாக புழுதி காற்று வீசி வருவதால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்று வேக மாறுபட்டால் குமரிக்கடல் மன்னார் வளைகுடா தென் தமிழகம் இலங்கை கரையோரம் பலத்த காற்று வீசக்கூடும்.

40-50 கி.மீ.வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி வடக்கு பாக் ஜலசந்தி மற்றும் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இரண்டுமே வழக்கத்திற்கு மாறாக 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளம் பாலம் மீது ராட்சத அலைகள் மோதுவதால் கடல் அலைகள் 6 அடி முதல் 8 அடி உயரத்திற்கு எழுந்து வருகிறது.

கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் இதனால் ஏற்படும் புழுதி புயல் காரணமாக தனுஷ்கோடி சாலையில் ஒரிரு இடங்களில் கடற்கரை மணலால் முடியுள்ளது.