
மன்னார்-மாந்தை மேற்கில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
-மன்னார் நிருபர்-
நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிரான ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் இன்று காலை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
காலை 9.30 மணியளவில் நெடுங்கண்டல் சந்தியில் ஆரம்பமான ஊர்வலம் மாந்தை மேற்கு பிரதேச செயலக வீதியை சென்றடைந்தது.
இதன் போது கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை, விலையேற்றம், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவற்றை முன் வைத்து அரசின் செயல்பாட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை மன்னார் நகர பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது.
அரச போக்குவரத்து சேவைகள் சிறிய அளவில் இடம் பெற்றது, பாடசாலைகள் இயங்கவில்லை, இதனால் மன்னார் நகர பகுதியில் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.


