மன்னார் தாதிய உத்தியோகத்தர்களின் பணிப்பகிஸ்கரிப்பு-நோயாளர்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்-

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த அநீதியான முடிவு தாதியர் சேவையின் கௌரவத்திற்கும்,தனித்துவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் என்பதை கருத்தில் கொண்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் தாதிய உத்தியோகத்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகணத்தில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடக்கம் நாளை வியாழக்கிழமை காலை 7 மணி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

வைத்திய சேவைகள் இடம் பெற்ற போதும் தாதிய உத்தியோகத்தர் களினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ள மையினால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.