
மன்னாரில் சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு பனை விதைகள் நாட்டி வைப்பு
-மன்னார் நிருபர்-
சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு, இயற்கை மீதான மக்களின் புரிதலை அதிகரிக்கும் நோக்கில், இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் பனை விதைகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.
அமிச்சி ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவனர் மால்கம் மார்ஷல் மற்றும் ஜசிகரனின் நெறிப்படுத்தலின் கீழ், பண்ணையின் முகாமையாளர் அலன் நிரோஷனின் தலைமையில், தாழ்வுபாடு கடற்கரை வீதியில் இந்தச் செயற்பாடு நடைபெற்றது.
செப்டம்பர் 16 ஆம் திகதி உலக அளவில் அனுசரிக்கப்படும் சர்வதேச ஓசோன் தினத்தின் முக்கியத்துவத்தையும், பனை மரத்தின் பயன்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அமிச்சி ஒருங்கிணைந்த பண்ணை ஊழியர்கள், மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் பனை விதைகளை நட்டு வைத்துள்ளனர்.
மேலும், கடற்கரை பகுதிகளை பசுமையாக மாற்றும் நோக்கில், அமிச்சி ஒருங்கிணைந்த பண்ணையின் சிரமதான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, தொடர்ந்து பனை விதைகள், மவுக்கேனி, தேக்கு, தென்னை போன்ற மரக்கன்றுகளும் நாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

