
மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
-மன்னார் நிருபர்-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்ட இந்திய 10 மீனவர்களின் வழக்கு விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் 19 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து, 2 படகுகளுடன், குறித்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, குறித்த மீனவர்களை நேற்று வியாழக்கிழமை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் குறித்த மீனவர்கள் 10 பேர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது, விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த 10 மீனவர்களையும் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டனர்.
மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
