மனைவியின் நடனத்துடன் பிரியாவிடை கொடுத்தார் ரோபோ சங்கர்

 

நடிகர் ரோபோ சங்கரின் உடல் இன்று வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் இரசிகர்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் நகைச்சுவை நட்சத்திரமாக குறுகிய காலத்திலேயே ஜொலித்த ரோபோ சங்கர், சென்னையில் கௌதம் மேனன் – தர்ஷனின் காட்ஜில்லா படப்பிடிப்பில் இருந்தபோது மயக்கமடைந்து செப்.16 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நிலை மேலும் மோசமானதால் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன், ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், சினேகன், செந்தில் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் விஜய் எண்டனி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அவருடன் இணைந்து நடித்த சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.

ரோபோ சங்கரின் உடல் இன்று வெள்ளிக்கிழமை மாலை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பிருந்தாவன் நகரில் உள்ள மின் மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள், திரைப் பிரபலங்கள், இரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

அவரது மனைவி பிரியங்கா கண்ணீருடன் நடனமாடி பிரியாவிடை கொடுத்தார்.