மனிதனை விழுங்க முயன்ற 15 அடி நீள மலைப்பாம்பு: போராடி மீட்ட கிராம மக்கள்

இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கல்யாண்பூர் கிராமத்தில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தாக்கியதில் ஒருவர் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் திறந்த வெளியில் மலம் கழிப்பதற்காக காட்டுப் பகுதியை தேடிச் சென்றிருக்கிறார். ஆனால் அவருக்குத் தெரியாமல் பின்னால் வந்த மலைப்பாம்பு, அவரது கழுத்தை இறுக்கமாக பிடித்தபடி கழுத்தில் சுற்றிக் கொண்டது. பயந்துபோன அந்த நபர், யாராவது காப்பாற்றுங்கள் என அலறியுள்ளார். ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் மலைப்பாம்பின் வாயைப் எப்படியோ இறுக்கமாக பிடித்தபடி, உதவி செய்யும்படி கூச்சலிட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற கிராம மக்கள் விரைந்து வந்து அந்த நபரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதற்குள் மலைப்பாம்பு அந்த நபரை முழுமையாக சுற்றிக் கொண்டது. அவர் பயத்தில் நடுங்கியபடியே அமர்ந்திருக்க, சுற்றி நின்ற கிராம மக்கள் ஒவ்வொருவரும் அவரை காப்பாற்ற தங்களால் முடிந்த உதவியை செய்து கொண்டிருந்தனர்.

ஒரு நொடி கூட வீணடிக்காத உள்ளூர்வாசிகள், உடனடியாக அந்த மனிதரிடமிருந்து மலைப்பாம்பை பிரிக்க முயன்றனர். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் பாம்பை பிரிக்க முடியவில்லை. ஒருவேளை இந்த முயற்சி அவரது உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுமோ என்று அஞ்சிய கிராம மக்கள், அங்கிருந்த கோடாரி, கற்கள் மற்றும் பிற கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மலைப்பாம்பைக் கொன்றனர்.

மலைப்பாம்பை கொன்றதற்காக கிராம மக்கள் மீது வனத்துறையால் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக விலங்குகளை கொன்றால், அதை குற்றமாக ஏற்க முடியாது என்றனர்.

இந்த சம்பவம் குறித்து வனக்காப்பாளர் மகேஷ் சந்திர குஷ்வாஹா கூறுகையில், மலைப்பாம்பு அந்த நபரின் கழுத்தை சுற்றியதால் மூச்சு விட முடியாமல் தவித்து கொண்டிருந்தார். அத்தகைய சூழ்நிலையில் அவரை உயிரோடு மீட்க வேண்டுமென்றால், அந்த மலைப்பாம்பை கொல்வது ஒன்றுதான் வழி. அதைதான் கிராம மக்களும் செய்துள்ளனர். இப்படியொரு சூழ்நிலையில் மனிதர்களால் விலங்குகள் ஏதாவது கொல்லப்பட்டால், அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்