
மந்திகை வைத்தியசாலை கட்டட ஒப்பந்த மோசடி : புதிய அத்தியட்சகரை மாற்ற திட்டம்
-யாழ் நிருபர்-
பருத்தித்து துறை மந்திகை ஆதார வைத்தியசாலையின் இடம் பெற்ற கட்டட நிர்மாண ஒப்பந்தத்தை குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் தர்சனின் சகோதரருக்கு வழங்கியதை மறைக்கும் முகமாக புதிய அத்தியட்சகரை மாற்றுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது .
குறித்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய வைத்தியர் கமலநாதன் காலத்தில் குறித்த வைத்தியசாலையின் கட்டட ஒப்பந்தங்கள் திறந்த விலை மனுக் கூறல் என்று வழங்கப்பட்டமை மாகாண கணக்காய்வு திணைக்கள விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தங்கள் யாவும் தற்போது குறித்த வைத்திய சாலையில் கடமையாற்றி வரும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தர்ஷன் என்பவருடைய சகோதரனுக்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
புதிதாக கடமைக்கு வந்த வைத்திய அத்தியட்சகர் குறித்த விடயங்களை ஆராயாமல் இருப்பதற்காக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனின் தூண்டுதலின் பேரில் வைத்தியர் தர்சன் ஊழியர்களையும் பொது மக்களையும் தூண்டி விடுவதாக அறிய கிடைத்துள்ளது.
ஏனெனில் குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திகள் இடம் பெற்ற போது சுமாராக கோடி ரூபா வெளிநாட்டு நிதி முறையற்ற விதத்தில் கையாளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நிறைவடையாத நிலையில், புதியவர் ஒருவர் கடமையை ஏற்றால் அது தமக்கு பாதகமாக அமைந்து விடும் என வைத்தியர் கமலநாதன் மற்றும் கேதீஸ்வரன் எண்ணுவதாகக் கூறப்படுகிறது.
ஏனெனில் குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட நிர்வாகம் யாப்பு விதிகளுக்கு முரணானது என மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் உறுதிப்படுத்திய நிலையில் அதன் போசகராக முன்னாள் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் பதவி வகித்துள்ளார்.
ஆகவே, தமது ஊழல் மோசடிகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக முன்பிருந்த வைத்தியர் கமலநாதனை தொடர்ந்து கடமையில் வைத்திருந்தால் தாம் தப்பிக் கொள்ளலாம் என்ற நோக்கத்திற்காக ஊழியர்களையும் மக்களையும் குழப்பும் வகையில் குறித்த வைத்தியசாலையின் செயலாளர் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
