மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்-

மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில், பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் ஒழுங்கமைப்பின் கீழ் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை  இடம்பெற்றது.

இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

பிரதேசத்தின் விவசாயம், நீர்ப்பாசனம்,  சுகாதாரம், சுற்றாடல், மீன்பிடி, கல்வி மற்றும் மக்களின் சமூக மேம்பாடு, உட்பட சகல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச அரச, அரச சார்பற்ற திணைக்களங்களின் தலைவர்கள்,  சமூக மட்ட பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.