மட்டு.குருக்கள்மடத்தில் தென்னந்தோப்பிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குருக்கள்மடம் தென்னந்தோப்பிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

குருக்கள்மடம் தென்னந்தோப்பில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள், களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவுக்கமைய, அங்கு விஜயம் செய்த களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பதப்பிள்ளை ஜீவரெத்தினம், சடலத்தை பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்காக அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர், குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சோமசுந்தரம் (வயது 81) என அடையாம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.