
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சேவ் த சில்றன் நிறுவனம் முன்னெடுக்கவுள்ள, மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், சேவ் த சில்றன் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்திட்ட இணைப்பாளர் சிவதர்ஷினி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 பிரதேச செயலகங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 6000 பயனாளிகள் பயன் பெறவுள்ளனர்.
இவ் உதவித் தொகைத் திட்டத்தின் ஊடாக மாற்றுத் திறனாளிகளைக் கொண்டுள்ளோர், சுகாதாரப் பாதுகாப்புத் தேவையுடையோர், சிறுவர்கள், பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட குடும்பங்கள், பாலின அடிப்படையில் வன்முறைக்கு உள்ளானவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பம் முதலானோருக்கு ரூபா 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கான பயனாளர் தெரிவு மற்றும் தரவு திரட்டல் பிரதேச செயலகங்களினூடாக இடம்பெற்று இறுதியாக மாவட்ட செயலகத்தின் விசேட குழுவினால் இறுதிப்படுத்தப்படவுள்ளது.
இச் செயற்திட்டத்திற்கான நிதி அனுசரணையை யு.என்.எவ்.பி.ஏ மற்றும் சேவ் த சில்றன் ஆகியன வழங்கவுள்ளன.
