மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முழு நாள் செயலமர்வு!

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

“சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” எனும் தொனிப்பொருளில் மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு, பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஶ்ரீகாந்த் தலைமை தாங்கி நடாத்திய நிகழ்விற்கு, இலங்கை பத்திரிகைப் பேரவையின் தலைவர் பீ.ஆர்.விஜயபண்டார பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

இச்செயலமர்வில் திருகோணமலை பல்கலைக்கழக தொடர்பாடல் மற்றும் வனிக ஆய்வு பீடத்தின் விரிவுரையாளர் ஜோயல் ஜெய்ருஸ் ரவிச்சந்திரன் மற்றும் தினகரன், வாரமஞ்ச பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான தேவதாசன் செந்தில்வேலவர் ஆகியோர் சிறப்பான முறையில் விரிவுரையாற்றியிருந்தனர்.

இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் உதவி ஆணையாளர் சுரேசான்ன இரங்க, மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் ஆகியோரின் இணைப்பாக்கத்தில் இச்செயலமர்வு இடம்பெற்றதுடன், குறித்த செயலமர்வில் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள், சமூக ஊடக வலையமைப்புக்கள் போன்றவற்றின் ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள், மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் இடம்பெறும் அரச நிகழ்வுகளை அறிக்கையிடும் உத்தியோகத்தர்கள் என 70 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைந்திருந்தனர்.

ஊடகவியலாளர்கள் ஒரு சமூகத்தின் கண்ணாடி என்பதுடன் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் ஊடகங்களும், ஊடகவியளார்களும் பெரும்பங்காற்றுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை, இதனடிப்படையில் இன்றைய தினம் ஏற்பாடு செய்துள்ள “சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” எனும் தொனிப்பொருளில் ஊடக நெறிமுறை, செய்தி வடிவமைப்பு, பிழையான செய்தியறிக்கையின் ஊடாக ஏற்படும் விளைவுகள், சமூகப் பொறுப்புடன் செய்தியறிக்கையிடல், சமூக ஊடக பாவனை போன்ற மேலும் பல விடையங்கள் இதன் போது வளவாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது