
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தென்கொரிய முதலீட்டாளர்கள் விஜயம்
-மட்டக்களப்பு நிருபர-
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் கோரிக்கைக்கமைவாக தென்கொரிய முதலீட்டாளர்கள் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி காலாமதி பத்மராஜாவை குறித்த தென்கொரிய முதலீட்டாளர்களர் குழுவினர் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், மாவட்டத்திலுள்ள வளங்களை தென் கொரிய முதலிட்டாளர்கள் அறிந்து கொள்ளுவதற்காக மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமாரினால் முன்னறிக்கை செய்யப்பட்டது.
மாவட்டத்தின் பிரதான உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சூரிய மின்சார உற்பத்திக்கு உகந்த காலநிலை காணப்படுவதனால் களப்பில் மிதக்கும் ஒளிமின்னழுத்தியங்கள் மூலம் மின்சார உற்பத்தி மேற்கொள்ள துறை சார் நிபுணர்களினால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்வில் தென்கொரிய அரசாங்கத்தின் வெளிநாட்டு முதலீடுகளுக்கான பொறுப்பதிகாரி கலாநிதி ஜெ.எச்.லி, பணிப்பாளர் சீயோல் கியூ லீ, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, தவிசாளர் அத்துல பி.அபயகோன் , இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உதவி பணிப்பாளர் ஷிரான் ரத்நாயக்க, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


