மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பேராலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று செவ்வாய்கிழமை திகதி மிகவும் பக்திபூர்வமாக ஆயிரக்கணக்கான பக்த அடியவர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இக்கொடியேற்ற ஆரம்ப உற்சவத்தின் போது ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், வசந்த மண்டப பூசை என்பன இடம்பெற்றது.
இன்று நண்பகல் 12.00 மணியளவில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் தம்ப பூசை, வசந்த மண்டப பூசை மற்றும் சுவாமி உள் வீதி, வெளி வீதியுலா என்பன நடைபெறவுள்ளது.
அத்தோடு ஆடி அமாவாசை உற்சத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதியும், மறுநாள் 24 ஆம் திகதி பிதிர்கடன் தீர்க்கும் ஆடியமாவாசை தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்த குளத்திலும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொடியேற்ற பூசைகள் யாவும் பேராலய பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ இரத்தினபூரண சுதாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.