
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான சாத்தியம்!
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
