
மட்டக்களப்பில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உப பரிசோதகர் கைது
மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த உப பொலிஸ் பரிசோதகர் கடந்த முதலாம் திகதி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சிவில் உடையில் சென்று அதன் உரிமையாளருக்கு உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அதனால் கொழும்பில் இருந்து தன்னை சென்று சோதனையிடுமாறு தெரிவித்து அறைகளில் வாடகைக்கு இருந்தவர்களை சோதனையிட்டு அவர்களை மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து தனக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் தருமாறு கோரிய நிலையில் தன்னிடம் இப்போது அந்த தொகை பணம் இல்லை எனவே 30 ஆயிரம் ரூபாதான் தற்போது உள்ளது என தெரிவித்த நிலையில் அதனை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சமாக பெற்றுள்ளார்.
இது தொடர்பாக குறித்த ஹோட்டலில் இருந்த சிசிரி கமராவில் பதிவாகிய காட்சிகளுடன் ஹோட்டல் உரிமையாளர் மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தகவல் அறிந்த சந்தேக நபர் உடனடியாக இலஞ்சமாக பெற்ற 30 ஆயிரம் ரூபா பணத்தை அவருடன் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து அனுப்பி ஹோட்டல் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் உதவி பொலிஸ் மா அதிபரிடம் ஹோட்டல் உரிமையாளர் பணத்தை திருப்பி தந்த விவகாரத்தை தெரிவித்ததையடுத்து இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் இலஞ்சம் வாங்கிய குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் சந்தேக நபர் தலை மறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் குறித்த உபபொலிஸ் பரிசோதகரை பணியில் இருந்து கடந்த திங்கட்கிழமை இடை நிறுத்தியுள்ளதுடன் தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நிலையில் சந்தேக நபர் குறித்த நபரை இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்