
மட்டக்களப்பு-தும்பங்கேணி கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைகள்
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவுக்குப்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில், இன்று வியாழக்கிழமை அதிகாலை இரண்டு காட்டு யானைகள் புகுந்ததனால் அக்கிராமத்து மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்பட்டுள்ளார்கள்.
இதனால் தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு கொழுத்தியும் யானைகளை விரட்டியுள்ளனர்.
எனினும், யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களையும் தள்ளி அழித்துவிட்டு ஒருவாறு நகர்ந்துள்ளது.
யானைகள் கிராமத்தைவிட்டு நகர்ந்துவிட்டதாக நினைத்து மக்கள் உறக்கத்திற்குச் சென்றுள்ளனர்.
ஆனாலும் கிராமத்தை விட்டு சென்ற யானைகள் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பீதியுடன், யானைகளை விரட்டியுள்ளனர்.
அண்மைக்காலமாக அப்பகுதியில் காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்துள்ளன.
எல்லைப் புறங்களைச்சுற்றி யானைப் பாதுகாப்பு வேலிகள் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் அது இற்றை வரையில் கைகூடாத நிலையிலேயே அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
