மட்டக்களப்பு கிரானில் கோயிலுக்கு சென்றவர்கள் மீது இடிமின்னல் தாக்கியது
-கிரான் நிருபர் –
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் அக்குரானை ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்றவர்கள் இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சித்தாண்டி பகுதியிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் மற்றும் மாவடிச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவர் என ஐவர் இவ்வாறு இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழிபாட்டிற்கு சென்றவர்கள் அங்கு கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக அருகில் இருந்த மரத்தின் கிழே சென்று அங்கிருந்த உழவு இயந்திரத்தின் மறைவில் இருந்துள்ளனர்.
இதன்போது திடிரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் இலக்காகி 5 பேரும் அதிர்ச்சிக்குள்ளாகி மயக்கமுற்றனர்.
பின்னர் அவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்