
மட்டக்களப்பு கள்ளியங்காடு சவக்காளையில் மணல்மேடை அமைக்கும் பணிகள் பூர்த்தி
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு நகரச் சூழலில் அமைந்துள்ள கள்ளியங்காடு சவக்காளையில் 20 இலட்ச ரூபாய்கள் செலவில் மணல்மேடை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
கள்ளியங்காடு சவக்காளையில் இடம்பெற்று வந்த மணல் மேடை அமைக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில் அதனைப் பார்வையிட நேற்று முன்தினம் சனிக்கிழமை அலிஸாஹிர் மௌலானா அங்கு சென்றிருந்தார்.
இதன்போது கோட்டைமுனை யூசுபியா பள்ளிவாசல் தலைவர் முன்ஷிப உட்பட நிருவாகத்தினரும் மஹல்லாவாசிகளும் சென்றிருந்தனர்.
மட்டக்களப்பு நகரில் வாழும் சகல இனங்களுக்கும் பொதுவான அடக்கஸ்தலமாக கள்ளியங்காடு சவக்காளை உள்ளது. அந்த இடத்திலுள்ள முஸ்லிம் சவக்காளை பகுதியில் மழை காலங்களில் சடலங்களை அடக்கம் செய்வது பெரும் சிரமம் நிறைந்ததாக காணப்பட்டது.
மழைக்காலத்தில் சடலங்களை அடக்கம் செய்யும் அந்த இடம் ஈர நிலமாகக் காணப்படுவதால் இலை குலை தென்னை ஓலை என்பவற்றை நிரப்பி சடலங்களை நல்லடக்கம் செய்யவேண்டியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் கோட்டைமுனை யூசுபியா பள்ளிவாசல் நிருவாகம் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் கவனத்திற்கு கொண்டு சென்றது. அதன் காரணமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மணல் மேடை அமைக்கும் பணிகள் நிறைவுற்றுள்ளன.
