மட்டக்களப்பு-களுதாவளையில் காரணம் தெரியாமல் ஒன்றுகூடிய பெண்களால் குழப்பம்

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் பிரதேசத்தின் பல இடங்களிலிருந்து வருதை தந்த சில பெண்கள் இன்று செவ்வாய்கிழமை  ஒன்றுகூடினர்.

இவ்வாறு ஒன்றுகூடிய சில பெண்கள் வாசகங்கள் எழுதப்பட்டடிருந்த பதாகைகளையும் கொண்டு வந்திருந்தனர்.

எதற்காக வந்துள்ளீர்கள் என குறித்த பெண்களிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்!

எம்மை பிரதேச சபையில் கூட்டம் ஒன்றுக்காக வருமாறு எமது மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் அழைத்துள்ளார்கள், அதற்காக வந்துள்ளோம் என சில பெண்கள் தெரிவித்தனர்.

இன்னும் சிலர்  எமது  மகா சங்கத் தலைவிதான் எம்மை இவ்விடத்திற்கு கூட்டம் ஒன்றுக்காக அழைத்துள்ளர்,  எனவும் தெரிவித்தனர்.

இன்னும் சிலர் கருத்துத் தெரிவிக்கையில், பிரதேச சபை அமர்வின்போது பெண்களை அவதூறு செய்து பேசியதற்காக மனு ஒன்றை வழங்குவதற்காக வந்துள்ளோம், என தெரிவித்தனர்.

இந்நிலையில், பெண்கள் கூடிநின்ற பிரதே சபையின் முன்னால் வருகை தந்த அப்பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் குறித்த பெண்களிடம் ஏன் வந்துள்ளீர்கள்? எதற்காக வந்துள்ளீர்கள்? என  வினவினார்.

மேற்குறித்த விடையங்களை அப்பெண்கள் பிரதேச சபை உறுப்பினரிடமும்   தெரிவித்தனர். ஆனாலும் பொலிசில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு ஒன்று கூடியதற்காக, பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் ஆகிய நான் களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்ததையடுத்து அங்கு கூடிநின்ற பெண்கள் கலைத்து சென்றனர்.