
மட்டக்களப்பில் 155 வருடம் பழமையான வளிமண்டலவியல் கட்டிடம் சேதம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சமீபத்திய சீரற்ற காலநிலை பெருமழை வெள்ளத்தினால் மட்டக்களப்பில் இயங்கி வந்த 155 வருட கால பழமை வாய்ந்த வளிமண்டலவியல் திணைக்கள அலுவலகக் கட்டிடம் சேதமடைந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து மாவட்டச் செயலகத்தை அண்டி அமைந்துள்ள, சேதமடைந்த மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள அலுவலகக் கட்டிடத்தை மாவட்டச் செயலாளர் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
சேதம் பற்றி மாவட்டச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் ஒன்றினைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி எம். ஏ. எம். சாதிக் தெரிவித்தார்.
சேதமடைந்துள்ள கட்டிடத் தொகுதியைப் பார்வையிட்ட மாவட்டச் செயலாளர், மாவட்ட வளிமண்டல திணைக்கள அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் ஒன்றினை வழங்குவதற்காக ஏற்ற ஒழுங்குகளைச் செய்வதாக வளிமண்டலவியல் திணைக்கள அலுவலக அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்