
மட்டக்களப்பில் வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழுநோய் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் காவேரி கலாமன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பிலுள்ள ஐந்து கல்வி வலய அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான தொழுநோய் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை வைத்தியர் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளிஸ்வரனின் வழிகாட்டுதலின் கீழ் பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி திருமதி ஏ. கார்த்திகா தலைமையில் நடைபெற இக்கருத்தரங்கில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு நோய் தாக்கத்தின் தற்போதய நிலைமை தொடர்பாகவும் இந் நோயை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு தொழுநோய்க்கு பொறுப்பான வைத்திய அதிகாரி திலக்சனினால் அளிக்கை மேற்கொண்டு தெளிவூட்டப்பட்டது.
நாடளாவிய ரீதியாக ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் இந்நோய்த் தாக்கத்தினால் சிறார்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளமை தரவுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்டது.
தொழுநோயைப் பூரணமாக குணப்படுத்த்துவதற்கான மருத்துவம் தற்போது காணப்படுகின்ற போதும் மக்கள் மத்தியில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வின்மையே இந் நோய் பரவுவதற்கான பிரதான காரணமாக உள்ளது.
இதன் போது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவப் பகிர்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காவேரி கலாமன்றத்தினரினால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், காவேரி கலாமன்றத்தின் இணைப்பாளர் அருட் தந்தை ஏ. எஸ். ரூபன், பிரதிப் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ஆர்.சரவணபவன், பிராந்திய தொற்றாநோய் பொறுப்பதிகாரி இ.உதயகுமார், வலயக் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், பிராந்திய மேற்பார்வை சுகாதார பரிசோதகர் வி.வேணிதரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
