
மட்டக்களப்பில் மாணவிகளுக்கான பிரத்தியேக பேருந்து சேவை ஆரம்பம்!!
மட்டக்களப்பு இலங்கை போக்கு வரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மாணவிகளுக்கான பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை செல்லும் மாணவிகள் பேருந்துகளில் செல்லும் போது இடம்பெறுகின்ற, பாலியல் தொல்லைகள் தொடர்பாக மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்புக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் கவனத்திற்கு எடுத்து கொண்ட செயற்பாட்டின் கீழ், இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலை அத்தியட்சகர் கந்தசாமி சிறிதரன் கவனத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், கல்முனை தலைமை காரியாலய பிரதான பிராந்திய முகாமையாளர் விஜித்த தர்மசேன அனுமதியுடன், இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையின், பாடசாலை மாணவிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கு, முதல் முறையாக பாதுகாப்பான போக்குவரத்து வழங்கும் பிரத்தியோக பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் காலை 06.15 ஆரம்பிக்கப்படுகின்ற குறித்த பேருந்து, அருனோதயா பாடசாலை, கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயம், மகஜனா கல்லூரி, சிசிலியா பெண்கள் கல்லூரி, ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி, வின்சன்ட் பெண்கள் கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகள் முன்பாக பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




