மட்டக்களப்பில்  மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை செய்த உணவகம் சீல் வைப்பு!

மட்டக்களப்பு புகையிரத வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனை ஈடுபட்டசெய்த உணவகம் ஒன்றில் இருந்து உணவு வகைளை மீட்டதுடன் நீதிமன்ற உத்தரவுக்கமைய உணவகத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த உணவகம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் தவராஜா மிதுன்ராஜ் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கஜனன் குறித்த உணவகத்தை  சம்பவதினமான இன்று பகல் முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு மனித பாவனைக்கு உதவாது உற்பத்தி செய்த உணவான 6 கிலோ சோறு, 2 கிலோ பொரித்தகோழி, 2 கிலோ மீன் பொரியல், 3 கிலோ சமைத்த மீன், 3 கிலோ பழுதடைந்த வெங்காயம், போன்ற உணவுகளை மீட்டனர்.

இதனையடுத்து  உணவக உரிமையாளருக்கு எதிராக மனித நுகர்வுக்கு பொருத்தம் இல்லாத உணவு உற்பத்தி செய்தமை, உட்பட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ்  உணவக உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து குறித்த உணவகத்தை தற்காலிகமாக எதிர்வரும் 10 திகதி வரை மூடுமாறு நீதிமன்ற நீதவானின் கட்டளையையடுத்து குறித்த உணவகத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் மூடி சீல் வைத்தனர்.