
“மட்டக்களப்பில் பொலிவு பெறும் பொதுசன நூலகம்” நூல் வெளியீடு!
-மட்டக்களப்பு நிருபர்-
சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றம் ‘கா’ கலை இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடத்தும் நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் ‘மட்டக்களப்பில் பொலிவு பெறும் பொதுசன நூலகம்’ நூல் வெளியீடு எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் அரங்கேறவுள்ளது.
தருமபுரம் தருமரெத்தினம் வித்தியாலய அதிபரும், எழுத்தாளருமான சந்திரசேகரம் மணிசேகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம விருந்தினகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும், எழுத்தாளருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கௌரவ விருந்தினராகவும், அரங்கம் பிரதம ஆசிரியர் மூத்த ஊடகவியலாளர் பூ.சீவகன், ஆய்வாளர் என்.சரவணன், ஊவா வெல்ல பல்கலைக்கழக நூலகர் கலாநிதி து.பிரதீபன், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினம் மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் வி.றஞ்சிதமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் திருமதி பாரதி கென்னடி, பேராசிரியர் பால சுகுமார், பேராசிரியர் சி.சந்திரசேகரம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் ஆகியோர் விஷேட விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது நூல் அறிமுகவுரையினை கவிஞர் த. உருத்திராவும், நூல் நயவுரைகளை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன், இலங்கை நூலகர் சங்கத் துணைத் தலைவரும், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகருமான செ.சாந்தரூபன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
இங்கு வெளியீடு செய்யப்படவுள்ள ‘மட்டக்களப்பில் பொலிவு பெறும் பொதுசன நூலகம்’ நூலின் முதல் பிரதியினை மூத்த எழுத்தாளர் கவிஞர் செ. குணரெத்தினம் பெற்றுக் கொள்வார்.
