மட்டக்களப்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு வாகனத்தில் பயணித்த இருவர் கைது

மட்டக்களப்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லேண்ட்க்ரூஸர் வகை வாகனத்துடன் விமானப்படை கோப்ரல் உட்பட இருவரை வெடிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயணித்த லேண்ட்க்ரூஸர் வாகனத்தை பொலிஸார் சந்தேகத்தில் நிறுத்தியுள்ளனர். எனினும், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்தனர். அப்போது, வாகனத்தை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இதன்போது வாகனத்தில் இருந்து ஒரு கிலோ கிராம் அமோனியா, ஜெல்கூர், வெடிக்கான கயிறு, ஒரு பந்தம், 3 போத்தல் கெமிக்கல் என்பவற்றை மீட்டுள்ளனர்.

கொடகவெல அரகம்பாவிலை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ட்ரோன் கேமரா இயக்குநரான விமானப்படை கோப்பிரல் ஹனிந்து போப்பிந்த சமரவீர, களனி கொல்கம்புறவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிலால் சுஜீவ ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அத்துடன் லேண்ட் க்ரூஸர் வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.