
மட்டக்களப்பில் சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் மீட்பு
சக்தி வாய்ந்த 2 மோட்டார் குண்டுகள் மீட்பு.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழ் இருந்து இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த இரு குண்டுகளும் ஆற்றிலிருந்து அகப்பட்டுள்ளன. அதனை அவதானித்த குறித்த மீனவர் களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இரண்டு குண்டுகளையும் மீண்டுள்ளனர்.
இவ்விரு குண்டுகளும், 9 இஞ்ச் அளவைக் கொண்ட மோட்டார் குண்டுகள் எனவும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று குண்டு செயலிழக்கும் பிரிவினரைக் கொண்டு இக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த யுத்த காலத்தில் பட்டிருப்பு பாலத்தில் இருமருங்கிலும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
