மட்டக்களப்பில் அரச பேருந்து சாரதி மீது தாக்குதல்: நீதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

தனியார் பேருந்து சாரதி, நடத்துநர் மற்றும் ஒருவரால் தான் தாக்கப்பட்டதாக வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய  உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துநர் ஒருவர் ஜனாதிபதியிடம் நீதி கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபை வாழைச்சேனை சாலையில் பேருந்து நடத்துநராகக் கடமையாற்றும் அபூதாலிப் முஹம்மது ஹிஸாம் என்பவரே ஜனாதிபதியின் கவனத்திற்கு தனது முறைப்பாட்டைக் கொண்டு சென்றுள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டில் முறைப்பாட்டாளரான முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த 2025-01-22ஆம் திகதி எங்களது பேருந்து வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கு சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்து. அன்றைய தினம் பி.ப. 4.30 மணிக்கு எமக்கு வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கான சேவை நேரமாகும்.

இந்நிலையில் எமக்குரிய சேவை நேரத்தில் எமது பேருந்து வண்டிக்கு முன்னால் தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்பொழுது நான் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு டிக்கற் வழங்கிக்கொண்டிருந்தேன்.

இதன்போது தனியார் பேருந்தின்  சாரதி, நடத்துநர் மற்றும் இன்னும் ஒருவருமாக மூன்று பேர் எமது பேருந்தில் ஏறி வந்து எனக்கு தலையில் அடிக்க முற்பட்டனர் அப்பொழுது நான் தடுத்ததேன். அடி எனது கையில் பட்டதோடு, இன்னுமொருவர் பொல்லால் எனது தலையில் அடித்து பின்பு என்னை பேருந்திலிருந்து வெளியில் இழுத்தெடுத்து தாக்கினார்.

தாக்கியவர்கள் என் கையிலிருந்த டிக்கற் இயந்திரத்தையும் பறித்தெடுத்து என் கையிலிருந்த 2200.00 ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அதன் பின்னர் என்னை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2025-01-24ஆம் திகதி மாலை வீட்டிற்கு வந்தேன்.

அவர்கள் என்னைத் தாக்கியதில் எனது இடது தோள் பட்டையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறினார்கள். தற்போது இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கிணங்க தனியார் பேருந்து வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர். மற்றை இருவரையும் கைது செய்யவில்லை.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏற்கெனவே எமது வாழைச்சேனை சாலை பேருந்து சாரதி, நடத்துநர்களோடு பிரச்சினைப்பட்டுள்ளனர். அதற்கான முறைப்பாடும் உள்ளது. இவர்கள் அடிக்கடி இந்த வழிப்பாதையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றவர்கள். இது இவ்வாறிருக்க, இதுவரையில் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து வாழைச்சேனை டிப்போவால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அத்தோடு டிப்போ முகாமையாளர் இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளவர்களுடன் சமாதானமாகுமாறு என்னிடம் கூறுகின்றார்.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு நீதி பெற்றுத்தருமாறு தங்களை மிகத் தயவாய் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்