மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பேன்

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  “Ask Me Anything” என்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் சகல துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். ஜனாதிபதிக்கு நேரடியாக தமது கேள்விகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.
இங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சாதகமான பதில்களை வழங்கினார்.
கடவுச் சீட்டு பெறுவதில் உள்ள நெரிசலை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தாம் விரும்பிய அமைச்சரவையை நியமிக்காது, நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாகவும், இதற்காக மக்கள் தமக்கு விருப்பமானவர்களை புதிய பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள போது, ​​இந்நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்