போதை மருந்து விற்ற வைத்தியர் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பேராதனை சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை ஜயமாலாபுர பகுதியில் எத்கல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட வைத்தியரை கம்பளை பிரதான நீதவான் வசன நவர்த்தன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவரை எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு 11 மணியளவில் 1600 மாத்திரைகளை வைத்திருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக எத்கல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் கெகுலந்தர நீதிமன்றில் தெரிவித்தார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தேகநபர் கெலிஓயாவில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

போதைப்பொருள் பாவனையாளர்களிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும் பாதுகாப்பதற்காக மாத்திரைகளை இவர் கையிருப்பில் வைத்திருந்ததாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்துள்ளார்.