போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் கைது

நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் இன்று (10)  அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலன்னறுவையைச் சேர்ந்த  போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இன்று புனாணை ரிதிதென்ன பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வியாபாரி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து கல்குடாப் பிரதேசத்தில் விநியோகித்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 5,320 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 100 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.