பொலிஸார் துரத்திய டிப்பர் ஆலய திருவிழாவிற்குள் புகுந்ததில் 7 பேர் படுகாயம்
-யாழ் நிருபர்-
யாழ். நெல்லியடி – மாலுசந்திப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது, டிப்பர் வாகனம் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் சப்பரத் திருவிழாவின் போது பெருமளவான பக்தர்கள் கூடியிருந்தனர்.
இதன்போது மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம் பக்தர்கள் மத்தியில் புகுந்து அவர்களை மோதித்தள்ளிக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது.
குறித்த டிப்பர் வாகனம் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் வழிமறித்தபோது, டிப்பர் வாகனம் பொலிஸாரின் உத்தரவை மீறி மிக வேகமாகத் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 7 பேரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.